வியாழன், 28 அக்டோபர், 2010

நேசத்தில் பின்னப்பட்ட கேள்விகள்

இந்த கைகள் இன்னும்
என்னுடையதாய் இருக்கிறது
அது இப்போதும்
இயற்கையிடம்
வேண்டிக் கொண்டிருக்கிறது..

இந்த கால்கள் இன்னும்
என்னுடம்பில் இருக்கிறது
அது விடுதலையின்
பாதையை நோக்கி
ஓடிக் கொண்டிருக்கிறது..

என்து கண்களின் பார்வை
இன்னும் மங்கிப் போகவில்லை..
அது பேரொளியை
தேடிக் கொண்டிருக்கிறது..

எனது செவிகள் இன்னும்
கேட்கும் திறனை இழக்கவில்லை..
அது பூபாளத்தை
எதிர்பார்த்திருக்கிறது..

எனது மனம் இன்னும்
சோர்ந்து போக வில்லை..
அது நம்பிக்கையைப்
பற்றிக் கொண்டிருக்கிறது..

எது நடந்த போதும்
வாழ்க்கை ஒருமுறையே
வாழ்ந்திருப்பேன்..
சாவதற்குள்
என் மண்ணில்
சுதந்திரக் காற்றை சுவாசிக்க..

கைவசமிருக்கும்
அத்துணை காரணங்களையும்
சொல்லியாகிவிட்ட நிலையில்
காலாவதியான
அந்த காரணங்களையே
தின்னக் கொடுக்கிறாய் என்
நியாயமான கேள்விகளுக்கு ..
தின்று செரிக்க முடியாமல்
வெளித்தள்ளுகிறது..
நேசத்தில் பின்னப்பட்ட
கேள்விகளும்
எதிர்பார்ப்புகளும்
என் காத்திருப்பினூடே
.

புதன், 29 செப்டம்பர், 2010

எப்படி

இப்படி
இது நடந்தால்
எப்படி இருக்குமெனும்
எதிர்பார்ப்புடன்
செல்லும் போது
அதற்கு நேர்மாறாக
நடந்தால்
அப்படி வலிக்கிறது
என்பதை
எப்படி புரிய வைப்பது?
இப்படி செய்பவர்களுக்கு..

சுவாரசியம்

அடுத்த நொடி சுவாரசியங்களை
தனக்குள் புதைத்து நகரும்
காலத்திடம்
ஒரு சுவாரசியத்தையாவது
முன்கூட்டியே கேட்டு
தெரிந்துகொள்ள வேண்டுமென
விரும்பி அணுகினேன்..
அதை சொல்லிவிட்டால்
சுவாரசியம் இருக்காதென
ஓடிமறைந்தது..
துரத்தியோடும் போது எதிர்பட்டாய் நீ
ஒரு அழகான சுவாரசியமாக...

ஒத்திகை

எந்த ஒத்திகையும் பார்க்காமல்
காதலில் நுழைந்தாள்..
நேசமும்
நெருக்கமும்
நம்பிக்கையும்
நேர்மையும் என
அவளிடம் இருந்ததை
காதலுக்கு பரிசளித்தாள்..

இவள் காதலுக்கு
உண்மையானவளா என
காதல் அவளிடம் ஒத்திகை பார்த்தது..
அவளுக்கு எப்போதும்
கண்ணீரை பரிசளிப்பதும்
நம்பிக்கையை சிதைப்பதுமாக
மிக கொடூரமான தண்டனை
கொடுத்து சிரித்தது..
முன்பின் கண்டறியாத
பெரும் சோகமும்
பெருந்துக்கமுமாக
வலியுடன் போராடி
இறுதியில் காதலில் வென்றாள்..

காதல் அவளுக்கு அடிமையானது..
இப்போது ஒத்திகை பார்க்க
விரும்பினாள்..
காதலைக் காலடியில் மிதித்து
ஒரு மரணத்தின் அலறலை ரசித்தபடி..

ஒரு காதலின் கதை

அவளுக்கும் அவனுக்கும்
ஒருவரையொருவர் பிடித்திருந்தது..
அது நட்பா? காதலா?
என இருவரும் குழம்பித்
திரிகையில்
அது காதல்தான் என்று அவளும்
அது நட்புதான் என்று அவனும்
முடிவு செய்து கொண்டனர்..

அவள் காதலின் அத்தனை கதவுகளையும்
அலங்கரித்தாள்
அவன் நட்பின் அத்தனை கனவுகளையும்
அலங்கரித்தான்..
இரவுகள் காத்துக் கிடந்தன..
இருவரின் இணைப்பிற்காக..

தன் காதலை உறுதிபடுத்திக் கொள்ள
ஒருமுறை அதை பற்றி பேச ஆரம்பித்தாள்..
அவன் நட்பில் உறுதியாய் இருப்பதாகக்
காட்டிக் கொண்டான்..

அவளுக்கு அவனைத் தவிர
எந்த யோசனையும் இல்லை..
அவனுக்கு இவள் காதலைப் பற்றி
யோசனை இல்லை..
அவள் எத்தனை முறைகளில்
வெளிக்காட்ட முடியுமோ
அத்தனை முறையிலும்
காதலைச் சொன்னாள்..
அவன் எத்தனை முறை
மறுதலிக்க முடியுமோ
அத்தனை முறையும் மறுத்து நின்றான்..

அவள் தற்கொலை செய்துகொள்வதாக
சொல்லியும்
அவன் பிடிவாதமாக இருந்தான்..
சிலநாட்கள் பேசாமல் நகர்ந்தது..
ஒருநாள் அவனுக்கு பேச வேண்டும் போல் இருந்தது..
அழைப்பில் வேறு யாரோ பேசினார்கள்..
அவள் மாரடைப்பு ஏற்பட்டு
இறந்து இரண்டு நாட்கள்
ஆனதாக சொன்னார்கள்..

அவனுக்கு இப்போது உலகம்
இருண்டுவிட்டது போலிருந்தது..
அவள் அளித்த பரிசுப் பொருட்கள்,
கவிதைகள், கடிதங்கள்
புகைப்படங்கள் எல்லாவற்றையும்
எடுத்துப் பார்த்து கதறினான்..
அவளின் புகைப்படத்திலிருந்து
அவளது கை நீண்டு
அவனது கண்ணீரை துடைக்க
நீட்டிய கையை
அவன் இப்போது விடாமல்
பிடித்துக் கொண்டிருக்கிறான்..

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

காதல் கவிதை

எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு
கவிதையை எழுதுவது
அவ்வளவு சுலபமானதல்ல..

காதலைச் சொல்லும் கவிதையெனில்
அது வலியைச் சொன்னால்
அதை விட வேறு பிரச்சினை
கண்ணுக்குத் தெரியவில்லையா? என்பார்கள்..
அது சந்தோஷத்தை சொன்னால்
சமூகம் சார்ந்து என்ன சொன்னாய்? என்பார்கள்.

எல்லோரும் விரும்பக்கூடிய ஒரு
காதல் கவிதையை எழுதுவது
அவ்வளவு சுலபமானதல்ல..

விலை

எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது..
நாம் விதைக்கிற ஒரு வார்த்தைக்கு
நாம் வெறுக்கிற ஒரு சம்பவத்திற்கு
நாம் விரும்புகிற ஒரு நிகழ்விற்கு
நாம் மறைக்கிற ஒரு இரகசியத்திற்கு
நாம் மறக்கிற ஒரு நினைவிற்கு
நாம் புறக்கணிக்கிற ஒரு நேசத்திற்கு
நாம் வேண்டுகிற ஒரு கனவிற்கு
நாம் சிந்துகிற ஒரு துளி கண்ணீருக்கு
நாம் நிராகரிக்கிற ஒரு செயலுக்கு
நாம் ஏற்றுக் கொள்கிற ஒரு தண்டனைக்கு
நாம் சந்திக்கிற ஒரு பிரச்சினைக்கு
நாம் மறுதலிக்கிற ஒரு யாசிப்புக்கு
நாம் வைத்திருக்கும் ஒரு பிடிவாதத்திற்கு
எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது..

கனவுகள்

நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலித்திடுமெனில்
என் கனவுகள் எல்லாம்
உன்னைச் சேர்வதாகவே இருக்கும்..

மஞ்சள் நிறப் பட்டாம் பூச்சி

கண்ணாடியில் தனது பிம்பத்தையே
கண்டு மிரட்சியடைந்து
ஆக்ரோஷத்துடன் மோதும்
அந்த மஞ்சள் நிறப் பட்டாம் பூச்சியுடன்
பேச வேண்டும் போலிருந்தது..

சில வார்த்தைகள் சொல்ல
பட்டாம்பூச்சி கேட்டுக் கொண்டு
என் தலையணை அருகே அமர்ந்துகொண்டது..
சிறிது நேரம் அதன் வண்ணங்களை
என்மேல் பூசி விளையாடிவிட்டு
உறங்கிப் போனது..
நானும் உறங்கபோகிறேன்..

தூக்கத்திலிருக்கும்
அறைத் தோழிகள்
நாளை புகார் செய்யக்கூடும்
தூக்கத்தில் உளறினேன் என..

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

நம்மாலான முயற்சி

கண்ணெதிரே நடக்கும்
கொடுமைகளை
சிமிட்டாது காண பழகிவிட்ட
கண்களை
ஒன்று பிடுங்கியெறி
அல்லது
கொடுமை நடக்கும் இடங்களைக்
காண்பதைத் தவிர்..
அல்லது
கொடுமைகளை
பார்வை நெருப்பாலெறி...

காதுகளில் கேட்கும்
அராஜகங்களை சலிக்காது கேட்க
பழகிவிட்ட காதுகளை
ஒன்று அறுத்தெறி..
அல்லது
அந்த மாதிரியான
விஷயங்களைக் கேட்பதைத் தவிர்..

புலன்கள் உணரும்
அத்துணை தீமைகளையும்
அழித்தொழிக்க முனையும்
நசுக்கிவிடத் துணியும்
சில மனதிற்கு
நம்பிக்கையை விதைப்பதாவது
நம்மாலான முயற்சியாய்
இருக்கட்டும்..

என் கடைசி விருப்பம்

உனக்கொரு கடிதம் எழுதுகிறேன்
உயிரின் அசைவுகளையும்
உள்ளத்தின் விருப்பங்களையும்
ஒருங்கே கூட்டி...
எனது செல்களில்
பாதி இறந்து விட்ட போதிலும்
உனக்கொரு கடிதம் எழுதுகிறேன்..
(உயிர் போகும் வேளையிலும்
கையிலே அலைபேசி இருந்தும்
உதவி கோரி கடிதம் எழுதுவது
தமிழுக்கொன்றும் புதிதில்லையே)
எழுதிக் கொண்டிருக்கிறேனென்
இரத்தத்தால்..
உன்னைத் தவிர
வேறு யாராலும்
நிறைவேற்றப் பட முடியாத
என் கடைசி விருப்பத்தினை..

ஒரு போர் முடிவுக்கான ஆயத்தத்துடன்

சாப்பிட வாருங்கள்
நண்பர்களே..
எனது செங்குருதியினை
கடுகு தாளித்து பொரியலாகவும்
எனது எலும்புகளை
இஞ்சி பூண்டு தட்டிப் போட்டு சூப்பாகவும்
எனது மூளையினை
சிறிது மிளகு சேர்த்து வறுவலாகவும்
எனது வலுவற்ற தசைகளை
அரிந்து குழம்பாகவும்
இடையிடையே அருந்த
எனது துயர்மிகு நினைவுகளையும்
மேசை மீது வைத்துள்ளேன்.
உங்களில் யாராவது
சோறாக சமைய சம்மதமெனில்
அமரலாம்.
ஒரு போர் முடிவுக்கான
ஆயத்தத்துடன்.

இளைப்பாறுதல்

‘களைப்போடிருப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
இளைப்பாறுதல் தருகிறேன்’
என்றவரைக் களைப்போடு
சந்திக்கச் சென்றேன்.
மெல்ல ஊர்ந்த
நீண்ட வரிசையில்
கடைசி ஆளாக
நின்று கொண்டிருந்த
எனக்குப் பின்னும்
ஒருவர் வந்து சேர்ந்தார்.
திரும்பிப் பார்த்தேன்
களைப்போடு காணப்பட்டார்
மேற்கண்ட
வாசகத்துக்குச் சொந்தக்காரர்

தப்பிய அந்த சொல்

இருசக்கரவாகனத்தில்
மேம்பாலத்தில்
ஏறிக் கொண்டிருக்கையில்
கவிதைக்கான ஒரு சொல்லை
காதுகளில் வழிந்திருந்த
ஒரு பாடலில் இருந்து
பிடித்துக் கொண்டேன்.
அலுவலகம் வந்த பின்பு
நெடுநேரம் கழித்து வந்தது
அந்த சொல்லுக்கான நினைவு..
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.
அந்த பாடலையும் முணுமுணுக்கிறேன்
உள்ளிருந்து தப்பிய அந்த சொல்
அகப்படவில்லை..
பல பிரயத்தனங்களிலும் சிக்காத
அது ஒருவேளை
என்னைத் தேடியபடியிருக்குமோ
எனும் ஆதங்கம் மேலிட
அனைத்து வேலைகளையும்
அப்படியே விட்டுவிட்டு
இருசக்கரவாகனத்தில் செல்கிறேன்
மேம்பாலம் நோக்கி
காதுகளில் இசை வழிய..

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

உன் ஒற்றைச் சொல்

இயல்பாய்
ஒரு சொல்லை
எனக்களித்தாய்

ஆரவாரமின்றி
இரண்டு சொற்களாக
திருப்பித் தந்தேன்

அவற்றிலிருந்து
அறுவடை செய்து
நான்கு சொற்களை
வழங்கினாய்

அந்த நான்கு சொற்களையும்
செதுக்கி அலங்கரித்து
உன் வீட்டு முற்றத்தில்
வைத்துச் சென்றேன்..

மறுநாள் காலையில்
என் சன்னலோரத்தில்
பதினாறு சொற்கள்
குவியலாயிருந்தன..

அன்றிரவு
அந்த பதினாறையும்
ஒருவழியாக்கி
உன் வயலில் விதைத்து திரும்பினேன்

அதிகாலையில்
என் மாந்தோப்பில்
160 மூட்டை சொற்கள்
கிடத்தப்பட்டிருந்தன..

அவற்றை சுமந்து வந்து
பதினாறாயிரம் மூட்டைகளாக
உன் முல்லைக்காட்டில்
இறக்கித் திரும்பினேன்..

திணறியபடி வந்து
முன்னர் அளித்த
ஒற்றைச் சொல்லைத்
திரும்பக் கேட்டாய்..

எடுத்துக் கொள்ளென
எனதறையின் வாசலைத்
திறந்துவிட்டேன்..

உன் சொல்லிலிருந்து
பல்கிப் பெருகிய
கோடானுகோடி சொற்கள்
அடைபட்டிருந்தன..

அதிலிருந்து
உன் சொல்லைப்
பிரித்தெடுத்து
வெளியேறினாய்..

சில நொடிகளில்
வெடித்து சிதறி
பால் வெளிமுழுதும்
பரவிக் கிடந்தது
உன் ஒற்றைச் சொல்..
.

அறுவடை

எதை விதைக்கிறோமோ
அதுவே அறுவடையாகுமெனில்
காதலை விதைத்தால்
கண்ணீர் அறுவடையாவது
ஏன்
?

நாளை

ஏந்தி நிற்கும் கைகளுக்கு
வெறுமையை அளிக்க
ஒருபோதும் துணியாதே..
அந்தக் கைகள்
நாளை உன்னைக்
காப்பாற்றும் சூழலைக்கூட
பெறலாம்..

பொங்கி நிற்கும்
கண்களுக்கு
தீயிட முனையாதே.
அந்த கண்களே
நாளை உன்னை
வழிநடத்தக் கூடுவதாக
இருக்கலாம்..

நாடிவரும் கால்களுக்கு
மூடிய கதவினைக்
காட்டாதே..
அந்தக் கால்கள்
நாளை உன்னை
சுமந்து செல்ல நேரலாம்..

ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்கும்
மௌனத்தையே
பதிலாய் தராதே..
அந்த வார்த்தைகள்
நாளை உன்னை
இக்கட்டிலிருந்து
காப்பாற்றலாம்.
..

பெரு மரம் - சிறு பறவை

பெரு மரம் பெண்
சிறு பறவை ஆண்
பெருமரத்திலிருந்து
சில கனிகளைக்
கொத்தித் தின்பதிலேயே
நிறைவடைகிறது
பறவை..
தின்ற விதையை
ஒரு மரமாகவோ
பறவையாகவோ
விதைத்து விட்டு..
.

உன் கண்ணீரில் என் பிம்பங்கள்

கடைசி ஆசை ஏதேனும்
உண்டா? என சாகும் தருவாயில்
கேள்வி கேட்கப்படுகிறது..
சொற்களை இழந்த நான்
என் அசைவுகளில் வெளிப்படுத்துகிறேன்..
உன்னுடன் வாழ வேண்டுமென
மறுதலிக்கத் திராணியற்று
மண்டியிடுகிறாயென் முன்
கண்களில் நீர் வழிய..
உன் கண்ணீரில் என் பிம்பங்கள்
அசைகிறது முடிவுறா காதலைக்
கொண்டாடியபடி..

இப்படியே இரு..

எப்போதும்
இப்படியே இரு..
பெரும் துக்கமும்
சிறு சந்தோஷமும் தந்து..
கவிதைகளாவது பிறக்கட்டும்.

வித்தியாசமே

அறிவிக்கப்படுகிற வெற்றிக்கும்
அறிவிக்கப்படாத தோல்விக்குமான
வித்தியாசங்கள்..
சொல்லப்படாத காதலுக்கும்
சொல்லப்படுகிற நட்புக்கும்
இடையிலான வித்தியாசமே

வாழ்வே இறப்பு

ஈயென இரத்தலுக்கு
இறப்பே மேலாம்..
ஈயென இரந்தும்
ஈயாதவனுக்கு
வாழ்வே இறப்பு.

வியாழன், 22 ஜூலை, 2010

புகைப்படம் - 3

புகைப்படங்கள் ரகசியங்களற்றவை
சொல்லிவிடுகிறது
எடுக்கப்பட்ட நொடியில்
கொண்டிருந்த
மனதின் அசைவுகளை

புகைப்படம் - 2

முன் பின் பார்த்தறியாத
முகங்கள்
முதலில் புகைப்படங்களில்
பார்க்கப்படுகையில்
திணிக்கப்படுகிறது
ஒரு வித விலகலும்
நெருக்கமும்..

புதன், 21 ஜூலை, 2010

புகைப்படம்

மிகவும் ரசிக்கிறேன்
கருப்பு வெள்ளை புகைப்படங்களை
கருப்பா? சிவப்பா? மாநிறமா?
என் சொல்லாத
அதன் வெளிப்படையான ரகசியத்தை..

வெளிக்காட்டு

எதன் மீதான கோபத்தை
வெளிக்காட்டுகிறார்களென
படாரென இழுத்து மூடப்படும்
கதவுகளுக்குத் தெரிவதில்லை..
அந்த சத்தத்தைக்
கேட்பவர்களுக்கும் தெரிவதில்லை..

கடவுச் சொல்

எல்லோருக்குமான
ரகசியங்களில் ஒன்றாகவே இருக்கிறது
தனது பெயரோடு
தான் நேசிப்பவரின் பெயரை
முன் பின் சேர்த்துக் கொள்வதும்
அதனூடான குறியீடுகளை
கடவுச் சொல்லாக வைத்திருப்பதும்..

வெளிச்சப்புள்ளி

உனதழைப்பிற்காக
காத்திருந்த பொழுதுகளில்
இரவு துணையிருந்தது..
நீயழைத்தவுடன்
அணைத்துக் கொள்ள
இரவு தன் கண்களை மூடியிருந்தது..
மெல்ல என் கண்கள் மூடுகையில்
சன்னல் கம்பிகளின் வழியே
வெளிச்சப்புள்ளிகள்
தூரத்தில் வருவது தெரிந்தது..

குறுஞ்செய்திகள்

உன் பாராட்டையோ
கேள்வியையோ
சுமந்து வரும்
உன் குறுஞ்செய்திகள்
மாற்றிவிடுகிறது
எனது முந்தைய மனநிலையை..

பூப்பதும், உதிர்வதும்.

விரும்பியோ
விரும்பாமலோ
எங்கேயேனும்
நிகழ்ந்தபடிதானிருக்கிறது
ஒரு காதல் பூப்பதும், உதிர்வதும்.

சனி, 10 ஜூலை, 2010

கரைகிறது வாழ்வு

குறிஞ்சியில் புணர்தலில்லை
முல்லையில் இருத்தலில்லை
மருதத்தில் ஊடலில்லை
நெய்தலில் இரங்கலில்லை
பாலையில் பிரிதலில்லை..
அன்பின் ஐந்திணைகளும் கடந்து
அதற்கடுத்ததான
கைக்கிளையும்
பெருந்திணையும் கூட
மாறிப்போக
எட்டாம் திணையொன்றை
கண்டறியும் முயற்சியில்
கரைகிறது வாழ்வு..

வெள்ளி, 11 ஜூன், 2010

அக்கறை

நீ
மறந்துவிட்டுச் சென்ற
மதிய உணவை
காற்றிடம் கொடுத்தனுப்ப முனைந்தேன்
நகரக் காற்றுக்கு மாசுகளால்
தன்னடை தளர்ந்திருப்பதால்
உன்னைச் சேர தாமதமாகும்..

மேகத்திடம் கொடுத்தனுப்பலாமெனில்
வெயிலுக்கு பயந்து
மலைப்பிரதேசங்களை விட்டு
வெளியே வருவதில்லை மேகம்..

வேறெதுவும் யோசிக்காமல்
சட்டென்று நானே புறப்பட்டு வருகிறேன்
உன்னை உடனே சேர
என்னையின்றி
யாருக்கு அக்கறையிருக்கப் போகிறது?

சலவை

ஒவ்வொரு நேற்றையும்
சலவைக்கிட்டுத்தான்
இன்றாக உடுத்த வேண்டியிருக்கிறது..

ஒவ்வொரு நாளையும்
சலவை செய்ய
அதிக நேரம் பிடிப்பதில்லை..

சில நாட்களை சலவை
செய்யவே முடிவதில்லை..
அவ்வளவு கறைகள்
அப்பிக் கொண்டிருக்கிறது..
அதனை தூக்கிப்போடவோ
பழையனவற்றோடு ஒதுக்கவோ
கூடுவதில்லை..

சில நாட்களை சலவை
செய்ய மனம் வருவதில்லை
அவ்வளவு தூய்மையாக
மணத்துடன் இருக்கிறது..
ஆன போதும்
சலவைக்கு வந்து விடுகிறது..

முந்தைய நேற்றுகளிலுள்ள
பெருங்கோபமும்
சிறுசஞ்சலமுமான
அழுக்குகள் நீக்கப்பட்டு
மகிழ்வும், தெளிவுமான
புதிய வாசனை வீசுகிறது
இன்றைய நாளாடைகளில்..

எல்லா நாட்களும்
ஒன்று போல்
சலவை செய்யப்படுவதில்லை..

பரபரப்பும்
பதற்றமுமான
வாழ்க்கைச் சூழலில்
வாரத்தில் உடுத்திய
ஆறு நாட்களையும்
ஞாயிற்றில்தான்
சலவை செய்ய முடிகிறது....

ஞாயிற்றை எப்போது
சலவைக்கிடுவது?

ஒரு பறவை

ஒரு குழந்தையைப் போல
விளையாட விடு..
அல்லது
ஒரு பறவையைப் போல
பறக்க விடு..
அல்லது
ஒரு கவிதையைப் போல
வாழவிடு..
அல்லது
உன் நேசத்தையாவது
சொல்லிவிடு..

வீரத்திற்கான வெளிப்பாடு..

மிச்சமிருந்த
மரணம் பற்றிய பயத்தை
விட்டொழித்தேன்..
அறிமுகமற்ற
வாழ்வு பற்றிய
ரகசியத்தை
அறிந்து கொண்டேன்..
இரண்டும்
உன் மனதிலிருந்து
துண்டித்து வீசப்பட்ட
வார்த்தைகளின்
ஒப்பிடமுடியாத
வீரத்திற்கான வெளிப்பாடு..

நமக்கான இடைவெளி

நமக்கிடையே
ஒன்றுமில்லை..
அதீத நேசம்
அளவிலா அன்பு
அடங்காத மகிழ்ச்சி
அடம்பிடிக்கும் இதயம்
ஈர்ப்பான பார்வை
இப்படி
நமக்கிடையே ஒன்றும் இல்லை..
நமக்கான இடைவெளிகளில்
நம்மைத் தவிரவும் யாருமில்லை..

பின்வாங்க மறுக்கும் நேசம்..

வயல்வெளியினூடே
எதற்கும் அஞ்சாது நிற்கும்
வைக்கோல் பொம்மையினை
கண்டு பயந்து போகும்
பறவைகளைப் போலானதல்ல..
பின்வாங்க மறுக்கும் நேசம்..

வேறு வழி

எங்கு பார்த்தாலும் உன் பிம்பமே..
எதைக் கேட்டாலும் உன் குரலே..
எதைச் செய்தாலும் உன் நினைவே..
எது பேசினாலும் உனைப் பற்றியே..
எந்த நுகர்விலும் உன் வாசமே..
ஐம்புலன்களும் அடங்காமல்
உன்னைச் சுற்றி..
அடக்கும் வழி தெரியாமல்
அல்லாடுகிறேன்..
அத்தனையையும்
நிறுத்திக் கொள்ள
நீ நேசிப்பதைத் தவிர
வேறு வழியேயில்லை..

வகுப்புத் தோழி

அறிந்தோ அறியாமலோ
விரும்பியோ விரும்பாமலோ
எனக்கு மரணத்தை சந்திக்க வாய்த்திருந்தது..

எனக்கு மூத்தவன்
ஒரு வருடத்திற்குமுன்
இறந்தே பிறந்த
கருவறையில்தான்
நானும் கருவாயிருந்தேன்..

மூன்றாம் வகுப்பில்
வகுப்புத் தோழியுடன்
சண்டையிட்டுத் திரும்பிய மறுநாள்
அவள் நெஞ்சுவலியால்
இறந்த செய்தி
அஞ்சலி செலுத்துவதற்காக
சொல்லப்பட்டது..

ஆறாம் வகுப்பில்
பள்ளிக்குச் சென்ற
முதல் நாள்
உடன் நடந்து வந்த தம்பியின் மீது
வாகனம் மோதி அவன்
இரத்த வெள்ளமாய் கிடந்த போது..


பனிரெண்டாம் வகுப்பில்
பெரியப்பாவின் மகள்
கணவனின் சந்தேகத்திற்கு
கருவுற்ற நிலையில்
இரையாகினாள்..

முதுகலை இரண்டாமாண்டு
படிக்கையில்
வயதான காரணத்தால் மரணத்தை
தழுவிய தாத்தா
இறந்த செய்தியைக் கூட
உணரமுடியாமல்
அடுத்த 15 நாளில்
மூளைப்புற்றின் தாக்கத்தில்
உயிர்விட்ட அம்மாவின்
பேரிழப்பு..

எட்டுப்பக்க கடிதத்தைத்
துண்டறிக்கையாக்கிக் கொடுத்து
அதிர்ச்சி அலை ஏற்படுத்திய
முத்துக் குமாரின் உயிர்த்தியாகம்..

பெருநம்பிக்கையின்
அடையாளச் சின்னமான
தமிழ் உணர்வாளர்களின் தம்பி
பெரியாரின் வித்து
சிதைக்கப்பட்டதாக
ஊடக செய்திகள்..

இப்படி மரணத்துடன்
அறிமுக சந்திப்புகள்
பல வடிவங்களில்
வாய்த்திருக்கிறது..

இந்த முறை உடன்படிக்கை
ஒன்றில் கையெழுத்திட
சொல்லிக் காத்திருக்கும்
மரணத்தின் கையிலிருக்கும்
தாளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது
என அறிய ஆவலுடன்
தயாராகும் எனக்கு
சற்றும் விருப்பமில்லை
மரணித்து வாழ்வதில்..

விழியீர்ப்புவிசை

நான் உளறினேன்
நீ உதறினாய்
நானும் நீயும்
அறிந்திருக்கவில்லை..
அது என் இறுதி சொற்களென..

நான் நெருங்கினேன்..
நீ விலகினாய்..
நானும் நீயும்
அறிந்திருக்கவில்லை..
அது என் இறுதி விருப்பமென..

நான் அழுதேன்..
நீ சிரித்தாய்..
நானும் நீயும்
அறிந்திருக்கவில்லை..
அது என் கடைசிக்
கண்ணீர் துளியென..

நான் ஏதேதோ சொன்னேன்..
நீ எதுவுமே சொல்லவில்லை..
நாம் அறிந்திருக்கவில்லை..
அது நமக்கு கடைசி சந்திப்பென..

நான் நீயாயிருந்தேன்..
நீ நானாகவில்லை..
நாம் அறிந்திருந்தோம்..
நமக்குள்
விழியீர்ப்புவிசை இருப்பதை..

ஏதும் திட்டமிடப்படாத
நம் பயணத்தில்
எல்லாவற்றையும்
திட்டமிட்டிருந்தது
இயற்கை..

சராசரி கனவு

வாழ்ந்து கொண்டு மரணிப்பதும்
மரணித்துக் கொண்டு வாழ்வதுமான
போக்கில்
இன்னும் உடன்படிக்கை
ஏற்படவில்லை..
சராசரி கனவுகளுடன்
பயணிக்குமெனக்கு..

நகருமென் பொழுதுகள்

சில கனவுகளைச் சொல்லியும், சொல்லாமலும்
சில கவிதைகளை எழுதியும், எழுதாமலும்
சில வார்த்தைகளைப் பகர்ந்தும், பகராமலும்
சில இரவுகளைக் கொடுத்தும், கொடுக்காமலும்
சில கோபங்களைக் காட்டியும், காட்டாமலும்
சில சோகங்களை வெளியிட்டும், வெளியிடாமலும்
சில ரகசியங்களை மறைத்தும், மறைக்காமலும்
சில ஏக்கங்களைக் கூறியும், கூறாமலும்
சில நேரங்களைச் செலவிட்டும், சேமித்தும்
சில வலிகளைத் தாங்கியும், தாங்காமலும்
சில விருப்பங்களை அறிந்தும், அறியாமலும்
நகருமென் பொழுதுகள்
சில சமயங்களில் பிறப்பதும், மரணிப்பதுமாய்..

யார் கண்ணும் பட்டுவிடாமல்

சிறு ஓவியத்தையொத்த
நமது பயணத்தில்
கண்ணில் தென்பட்ட
அத்தனை வண்ணங்களையும்
குழைத்துப் பூசியிருந்தோம்..

கடலும், வானும் தோற்றுப் போகும்
நீலத்தில் நெருக்கத்தையும்
தும்பையும், நிலவும் பின்வாங்கும்
வெள்ளையில் தூய்மையையும்
குருதியும், ரோஜாவும் வெட்கப்படும்
சிவப்பில் சிந்தனையையும்,
கருவிழியும், இருளும் கண்டறியாத
கருப்பில் இரகசியங்களையும்
கதிரவனும், சூரியகாந்தியும் பார்த்திராத
மஞ்சளில் தெளிவினையும்
புல்வெளியையும், அடர்காடுகளையும்
மிஞ்சும் பச்சையில் விருப்பங்களையும்
சேர்த்து வரைந்த
ஓவியத்தையொத்த காட்சியை
இதுவரை பாதுகாத்து வருகிறோம்..
யார் கண்ணும் பட்டுவிடாமல்..

நதியினடி

இருளுமென் பூமியைச் சுற்றி
வட்டமிடுகிறதுன் பார்வை..

காடடர்ந்த பகுதியில்
ஒளிந்திருக்குமென் நேசத்தை
தேடியலைகிறதுன்
காலம் தவறிய ஞானம்..

யாருடைய அச்சுறுத்தலுக்கும்
மித மிஞ்சிய அன்பிற்கும்
அடிபணியாத
என் ஆசைகளை
மரக்குகைகளுக்குள்ளும்
நதியினடிக்குள்ளும்
மறைத்திருக்கிறேன்..

நீயும் கூட அறிந்திராத
அப்பாதைப் பரப்புகளை
குறியீடுகளால் விளக்கவும்
செல்லும் வழிகளிலுன்
தாகம் தீர்க்கவும்
நிலப்பரப்பில் விட்டு வந்திருக்கிறேன்..
குருதி கொட்டும் காலடித் தடங்களையும்..
சுரந்தபடியிருக்கும் சில சொற்களையும்..

வேறொன்றும் அறியேன்

உனது காலம் முழுமைக்கும்
உடன் வர விருப்பப்பட்டனேயன்றி
வேறொன்றும் பெருங்குற்றம்
புரியவில்லை..

உனது தீரா அன்பின்
வெப்பத்தில் பயணிக்க துணிந்தனேயன்றி
வேறொன்றும் பாவச் செயல்
செய்யவில்லை..

உனது குறும்புன்னகையின்
சிதறல்களை ஆயுளுக்கும் சேர்க்க
முயன்றதேயல்லாமல்
வேறொன்றும் தீமையினை
நினைக்கவில்லை..

எனது செல்கள் அனைத்திலும்
ஊடுருவிய உன்னை
ஒளித்து வைக்க
உன்னையே நாடியதை தவிர
வேறொன்றும் அறியேன் பராபரமே..

பைரவி ராகம்

உன்னைச் சந்திக்க கிளம்புகையில்
வாழ்வதற்கான பெருவிருப்பத்தோடு
இறங்கி நடக்கிறேன் சாலையில்..

என் அறையில் அணைக்க மறந்த
பண்பலையில் பைரவி ராகம்
கசிந்து கொண்டிருந்தது..

எதிர்வீட்டுத் தொட்டிச்செடியில்
இரண்டு பூக்கள் மலர்ந்திருந்தன..

வலதுபக்கத்தின் ஐந்தாவது வீட்டில்
குழந்தைகளின் சிரிப்பு சத்தம் கேட்டது..

தெருமுனையில் பிச்சைக்காரன் ஒருவனுக்கு
உணவளித்தாள் மூதாட்டி ஒருத்தி..

மூன்றாம் தெருவைக் கடக்கையில்
தாய்நாய் தன் குட்டிகளுக்கு
பாலூட்டியபடியிருந்தது..

உன்னை சந்தித்த பின்
மரணத்திற்கான யோசனையோடு
வீடு திரும்புகிறேன்..

தன் குட்டிகளிலொன்றை
விழுங்க முயற்சித்தபடியிருந்தது
தாய்நாய் மூன்றாவது தெருவில்..

அந்த மூதாட்டி பிச்சைக்காரனை
விரட்டினாள் தெருமுனையில்..

குழந்தைகளின் அழுகுரல் காதைக் கிழித்தது
இடது பக்கத்தின் ஐந்தாவது வீட்டில்..

பூக்களின் இதழ்கள் உதிர்ந்து கிடந்தன
எதிர்வீட்டுத் தொட்டிச் செடியில்..

எனது அறையிலிருந்த பண்பலையில்
முகாரிராகம் பாடிக் கொண்டிருந்தது..

பொறுப்பாளி

விசாரணைக்குட்பட
விருப்பமில்லை
நிரூபிக்கவும்
சாட்சிகளில்லை
எனது நியாயங்களும்
எனது தவறுகளும்
அவரவர் பார்வைக்கு
மாறுதலுக்குட்பட்டவை
இருப்பினும்
எனது செயல்களுக்கு
நான் மட்டுமே பொறுப்பாளியல்ல..
எனது கவிதைகளுக்கும் கூட..

திங்கள், 15 மார்ச், 2010

துரோகம்

யாராவது திருடிச் சென்று விடுகின்றனர்..
எனக்கும் மறைத்து வைக்கத்
தெரியவில்லை எதையும்..

காலப்போக்கில்
திருடக் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்
எனக்கும்..
முதன்முறை திருடிய போது
கையும் களவுமாய் மாட்டிக் கொண்டேன்..

பலரும் திருடியதை
நானே திருடியதாக சொல்லி
தண்டனை விதிக்கப்பட்டது..
என்னெதிரிலிருந்த
என்னிடம் திருடிய
யாரும் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை..

ஒரு துரோகம் கருவறையிலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தது..

சிங்கத்தின் கதை

பூங்கா ஒன்றில்
உட்கார்ந்திருந்த போது
‘எனக்கொரு கதை சொல்லு’
என அடம்பிடிக்க
சிங்கத்தின் கதையொன்றை
சொன்னாய்..

விழி விரித்து
இமை கொட்டாமல்
கேட்டுக் கொண்டிருந்தேன்..
உன் குரலின்¢ ஏற்ற இறக்கத்திற்கும்
உன் கையசைவிற்கும்
என் தலை அசைந்தது..

வீடு திரும்பிய பின்
அதைப் பற்றியே யோசித்திருந்தேன்
அன்றிரவு கனவில்
இரண்டு சிங்கங்கள்
என்னை துரத்தி வந்தது..
அதில் ஒன்றிற்கு உன்
முகத்தில் சாயல் இருந்தது..

புண்

தொடுவதெல்லாம்
பொன்னாக வேண்டுமென்ற
ஆசையில்லை..
புண்ணாக்காமல் இருந்தால்
போதுமானது..

சராசரிகளில் ஒருத்தி

குற்றத்தை சுமத்தும் அளவிற்கு
நான் குற்றமற்றவளோ
குற்றத்தை சுமக்கும் அளவிற்கு
நான் குற்றவாளியோ அல்ல..

சரியும் தவறுகளும் உடைய
சராசரிகளில் ஒருத்தி..

திருத்திக் கொள்ளச் சொன்னால்
திருத்திக் கொள்வேன்..
பொறுத்துப் போகச் சொன்னால்
பொறுத்துப் போவேன்..

எனக்கும் உன்னுடைய
கனவுகளைப் போலான
கனவுகள் வந்து போகின்றன..
நீ அடைக்காக்கிறாய்
நான் பொரித்து விடுகிறேன்..

நம்ப முடியவில்லை

இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டதாக
நம்ப முடியவில்லை..

எனது சொற்களுக்கு இந்த முடிவை
தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லாமல்
போய்விட்டதை ஏற்க முடியவில்லை..

எனது கண்களுக்குள் புகும் ஒளியினை
ஒரு நிழலைப் போல உள்வாங்குகிறேன..

எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும்
ஒரு துளி கண்ணீரைப் புதைத்து செல்கிறேன்..

எதிரே வரும் உனக்கு
தெரிந்திருக்குமா?
இன்றுடன் நானும் முடியப் போகிறேனென..


வலிகளின் வலி

காதலை விட மலிவானதும்
விலையுயர்த்ததும்
ஏதுமில்லை..

எதைக் கொடுத்தும்
வாங்கி விடலாம்.
எதைக் கொடுத்தும்
பெற முடியாது..

காதல்
முரண்களின் முரண்
சுகங்களின் சுகம்
வலிகளின் வலி

வாழ்தல்

சாகத் துணிந்தவளை
வாழ வைக்க மீட்டெடுத்தாய்..
வாழ்தல் எனும் பெயரில்
செத்துக் கொண்டிருக்கிறேன்
நொடி நொடியாய்..

என் அழுகுரல்

என்ன முடிவெடுத்துள்ளாய்?
என் மரணத்தின் இளைப்பாறாலாமென்றா?
என் வலியில் துயில் கொள்ளலாமென்றா?

எதுவாயினும்
புன்னகை மாறாமல் ஏற்றுக் கொள்கிறேன்
கொடுப்பது நீயாயிற்றே..

ஆயுள் முழுக்க
என் அழுகுரல்
உன் இதயத்தின் அறைகளில்
ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்
மறுதலிக்க
பயன்பட்ட சொற்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
உனக்கெதிரான ஆயுதமாகி
நள்ளிரவுகளில் நிழலாடும்..

அந்நிழலின் காலடியில்
என் கொலுசின் ஒற்றை மணி
ஆடிக் கொண்டிருக்கும்..

மௌனத்திற்கு கிடைத்த பரிசு

பற்றி எரியும் துயரத்தினூடே
பயணப்படுமென்
மெல்லிய பாதங்களில்
சதைகளே இல்லை..
எலும்பும் எரிந்து
சாம்பல் துகள்கள்
கொட்டிக் கொண்டிருக்கிறது..

அனைத்து உறுப்புகளும்
சாம்பலான பின்னும்
உன் வருகைக்கு வாசலான
கண்களும்
நீ வசித்திருந்த ஒற்றை
இதயமும்
முற்றிலும் எரியாமல்
மீந்து கிடக்கின்றன..

உன் வீட்டில் எடுத்துச்
சென்று பத்திரப்படுத்து..
யாரேனும் கேட்டால் சொல்..
உன் மௌனத்திற்கு கிடைத்த பரிசென்று

உதிர்ந்த இறகு

ஒருமுறை சொன்னாய்
‘பாரதியின்
அக்னிக் குஞ்சு..’

மனதுக்குள்
நினைத்துக் கொண்டேன்
‘பிரமிளின் உதிர்ந்த இறகு’

கால மொட்டவிழ்ந்து
தீப்பற்றியெறிந்த என் சிறகுகளில்
பிழைத்துக் கிடக்கிறது
உதிர்ந்த ஒற்றை இறகு..

சந்தர்ப்பம்

வாழ்விற்கும் மரணத்திற்குமான
போராட்டத்தில்
தொடர்கிறது பயணம்..

சில சமயங்களில்
வாழ்வதற்கான ஈடுபாடும்..
சில சமயங்களில்
மரணித்தினூடான ஆர்வமும்..

நிழலும் ஒளியுமாய்
வந்து போகின்ற
எண்ணங்களின் பிடியிலிருந்து
விலக்கிக் கொள்ள
சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை..

எந்த காலை இடமாற்ற

ஒரு நள்ளிரவில்
வாழ்க்கையின் ஒளிக்கீற்றுக்குள்
காலடி வைக்க எத்தனிக்கையில்
கதவு தட்டும் ஓசை கேட்டு
திறந்த போது
ஒரு கையில் ஒளிபந்துடனும்
மறுகையில் நிறமிழந்த பூக்களுடனும்
நின்றிருந்தது மரணம்..

வாழ்வின் பாதையிலொன்றும்
மரணத்தின் பாதையிலொன்றுமாய்
வைத்திருந்த கால்களில் ஒன்றை
இடமாற்ற நிர்பந்திக்க படுகிறேன்..
எந்த காலை இடமாற்ற?

கானல் வெளிச்சம்

இன்னும் காலம் தேவைப்படுகிறது
என் வலியின் ஈரம் உலர..

வருடுகிற காற்றும்
ஈரத்தை சொரிந்து செல்கிறது..

என் சிறகுகள் முற்றிலுமாய்
நனைந்து விட்டது..

புலரும் வெயிலுக்காக
புல்வெளியில் தன்னந்தனியாய்
நடுங்கியபடி காத்திருக்கிறேன்..

தொலைதூரத்தில்
வெளிச்சம் மேலெழும்புகிறது
விரைவில் ஈரம் உலர்த்துவதற்காக
நெருங்கி செல்கிறேன்..

நான் நெருங்க நெருங்க
விலகிச் செல்லுமதன் பெயரை
நானறியத் தாமதமாயிற்று..
அது ‘கானல் வெளிச்சமென’

நட்பு மட்டுமல்ல

உன்னால்
செவிமடுக்கப்படாமல்
ஓய்ந்து கிடக்கிறதென்
சொற்கள்..

காற்றடித்து
தள்ளிப் போகுமதனை
யார் கண்ணும் பட்டுவிடாமல்
பத்திரப்படுத்தி
உன் வீட்டு சாளரத்தின் இடுக்குகளில்
மறைத்து வைத்து திரும்புகிறேன்..

சாளரத்திலிருந்து வெளியேறும்
காற்றிலென் சொற்களின்
வாசனையறிந்து
அந்த நள்ளிரவில்
நீ பதறியெழுந்தால்
உனக்குள்ளிருப்பது
நட்பு மட்டுமல்ல.

உன் வண்ணங்கள் என் வாசனை

விளையாட்டாய் துவங்கிய
என் இயங்குதலில்
எந்த மறுதலிப்புமின்றி
நீயும் புகுந்து கொண்டாய்..

நேரமாக ஆக
மாறி வரும் உச்சத்தை
இருவரும் விரும்பினோம்..

பொழுதுசாயும் வேளையில்
திரும்புகையில்
உன் வண்ணங்கள் என்னிலும்
என் வாசனை உன்னிலும்
ஒட்டியிருந்ததை
கவனிக்காமலே
அவரவர் பாதையில் சென்றோம்..

என் இரவுகளில் வண்ணங்களும்
உன் இரவுகளில் வாசனையும்
நிரம்பியிருந்ததை
யாருமறிந்திருக்க வில்லை..

அதை கைமாற்றிக் கொள்ளும் நிமித்தம்
நிகழ்ந்த சந்திப்பில்
மீண்டும் விளையாடத் துவங்கினோம்..

வண்ணங்களில் வாசனையும்
வாசனையில் வண்ணங்களும்
இரண்டறக் கலந்து
எதை யார்
எப்படிப் பிரித்து செல்வதென
தெரியாமல்
விளையாடிக் கொண்டிருந்தோம்
நள்ளிரவைக் கடந்தும்.

பாதரசதுளிகள்

மௌனத்திலிருந்து தோற்றுப் போய்
வெளியேறுகிறது என் நிழல்..

அடர்ந்த மௌனம்
பின் தொடர்கிறது..

பாதரசத்துளிகளைப் போல
உருண்டோடும்
கண்ணீர் துளிகளின்
இயக்கம் தாளாமல்
வழித்தடமெங்கும்
சிறு பள்ளங்கள் மேவுகிறது..

இயலாமையின் கூக்குரலை
யார் காதுகளுக்கும்
எட்டாத வண்ணம்
இதயத்தில் குழி தோண்டி
ஆழ புதைக்கிறேன்..

உன்னை நினைத்து விடுகையில்
சட்டென திரளுகிறது
இயலாமையின் பாதரசதுளிகள்..

புன்னகையின் குப்பி

ஒருமுறை
கடற்கரைக்குச் சென்றபோது
கண்ணீரைச் சேமித்து
வைத்திருந்த குப்பி
தவறி விழுந்துவிட்டது
கடலில்..

அதற்கு பிறகான நாட்களில்
கடல்நீர் இன்னும் கரிப்பதாய்
கடலோர மக்கள்
பேசிக் கொண்டிருப்பதாக
யாரோ சொல்ல..

மீதமிருந்த
கொஞ்சம் புன்னகையை
குப்பியில் நிரப்பிக் கொண்டு
கடலை நோக்கி விரைந்தேன்..

எனக்கு முன்னதாக
ஒருவன் தன் புன்னகையின்
குப்பியை கடலில்
மிதக்க விட்டிருந்தான்..
என்னிடமிருந்த புன்னகையை
அவனிடம் சேர்ப்பித்துவிட்டு
திரும்பினேன்..

ஒரு மாலையில்
மக்கள் பேசிக் கொண்டனராம்
வலையில் விழும் மீன்களுக்கு
பற்களின் எண்ணிக்கைக்
கூடியிருப்பதாக..

கல்வாரி மலை

நான் செல்வதற்கு
சிறிய ஒற்றையடிப் பாதைதான் இருந்தது..
மலைமுகட்டிலிருந்து
எந்த பக்கம் திரும்பினாலும்
பயத்தினையளிக்கும் விதமான
சரிவுகளே தென்பட்டன..

வந்த வழியே திரும்பி பார்க்கிறேன்
என் கையிலிருந்து சிந்திய
விதைகள் மரமாகி அடர்ந்திருந்தன..

ஏது செய்வதென்று தெரியாமல்
அந்த ஒற்றையடிப் பாதையில்
செல்கிறேன்.
முள்முடி தரித்த
கருணா மூர்த்தியின் இரத்த சுவடுகள்
காட்சியளித்தன..
சிறிது தூரத்தில் அது
கல்வாரி மலையின் உச்சியை
சென்றடைந்தது..

அங்கே எனக்கென ஒரு சிலுவையும்
முள் முடியும் தரப்பட்டது..
மூன்றாம் நாள் உயிர்த்தெழ மட்டும்
வாய்ப்பின்றி போனது..

நீ என் தொடக்கம்

கவிதை
என் பலம்
அதுதான் பலவீனமும் கூட..

மௌனம்
என் ஆயுதம்
அதுதான் அடைக்கலமும் கூட..

காதல்
என் சுகம்
அதுதான் உச்ச வலியும் கூட..

நீ
என் தொடக்கம்
எனது முடிவும் கூட

திங்கள், 8 மார்ச், 2010

நிழலில் உறங்கும் வெயில்

முற்றமெங்கும் கொட்டிக் கிடந்தது வெயில்
வீட்டுக்குள் ஒளிந்திருந்தது நிழல்
இரண்டும் அதனதன் எல்லைக் கோட்டில்
ஒன்றையொன்று வெறித்தது
வெயிலுக்கு நிழலில் இளைப்பாறவும்
நிழலுக்கு வெயிலில் காயவும்
ஆர்வம் மேலிட
ஒப்பந்தம் போட்டுக் கொண்டன
பகல் முழுக்க நிழலில் வெயில் உறங்குவதென்றும்
இரவினில் வெயிலில் நிழல் காய்வதென்றும்..

சிரி அழு

நான் அழுகிறேன்
அவன் சிரிக்கிறான்
கரைந்தோடிய மௌனத்தில்
அதிர்வுகளை விட்டுச் சென்றிருந்தான்

நான் சிரிக்கிறேன்
அவன் அழுகிறான்
வெளிப்படுத்திய வார்த்தைகளில்
ஒன்றிரண்டு பதம் பார்த்திருந்தது

நான் அழுகிறேன்
அவனும் அழுகிறான்
இடைவெளியிலிருந்த காதல்
தேற்றுவாரின்றி கிடந்தது

நான் சிரிக்கிறேன்
அவனும் சிரிக்கிறான்
குறைந்த ஒளியில் சன்னமாய்
குரல்கள் மட்டுமே கேட்கிறது..

குருதிதுளிகள்

சிறகுகளை
ஒவ்வொன்றாய் பிய்த்து போட்டபடி
அந்த கானக வெளியினைக் கடந்தேன்
என்னைத் தேடி வரும் அவனுக்கு
நான் காணாமல் போவதையும்
அடையாளப்படுத்தி..

நெடுநாட்களாகியும்
யாரும் தேடி வராத நிலையில்
காய்ந்த குருதிதுளிகள்
தக்கைகளாயும்
சிறகுகள் இடமாறியும்
போயிருந்தனவென்று
எனக்கு பின்னால் வந்த
பருந்தொன்று
சொல்லிச் சென்றது..

சிதைந்த என் அடையாளங்களைத் தேடி
மீண்டும் வந்த வழி திரும்பினேன்..
சிறகுகளேதும் காணப்படாத நிலையில்
துயருற்று முள் மரத்தின் அடியில்
மருகி நிற்கையில்
அதன் கிளையொன்றில்
என் அத்தனை இறகுகளும்
சேகரிக்கப்பட்டிருந்தது
அருகிலேயே பாதுகாப்பாய்
அவனும்.

பிம்பம்

பாசாங்கற்ற புன்னைகையில்
உதிர்ந்தது முதல் பிம்பம்
தோழமையான பேச்சில்
உரிந்தது அடுத்த பிம்பம்
நெருக்கமான இடைவெளிகளை
நிரப்பியது மறு பிம்பம்
இப்படியாக பிம்பங்கள்
ஒவ்வொன்றாய் கழன்று விழ
முடிவில் வெளிப்பட்டது
எந்த சாயலுமற்ற பிம்பம்
அதில் பார்க்க முடிந்தது
எனது பிம்பத்தையும்..

நானுறங்காமல் விடியும் பொழுது

நகர மறுக்கும்
இரவுப் பொழுதுகளில்
ஏதிலியாயிருக்குமென்
உணர்வுகளை
வெகுதொலைவிலிருக்கும்
சிறு நட்சத்திரங்கள்
கண்சிமிட்டி நோக்குகின்றன..

அருகிலிருக்கும்
உன் அசைவுகளை
கண்ணுற்றபடி
சோர்ந்து துவளும்
கண்கள் துயிலுவதில்லை

துயரின் பிடியிலிருந்து
விலகிட முடியாத
மென் சோகத்தின்
புள்ளிகளைச் சுற்றியே
என் நிகழ்தலின் கோலம்
வரையப்பட்டிருக்கிறது

தொட்டுத் தொடரவோ
விட்டு விடவோ கூடாமல்
தனித்தலையும் என் இரவினை
சொட்டு சொட்டாய் கரைக்கிறேன்
நானுறங்காமல் விடியும் பொழுதுகளில்
உன் புன்னகையின் வெளிச்சத்தில்..

அழகுபடுத்த வேண்டியவை

இறந்த செல்களைப் புதுப்பித்து
வலி பொறுத்து தேவையற்ற முடிகளை நீக்கி
கதிரியக்க சிகிச்சை செய்து தோல் வழவழப்பாக்கி
சிலவகை திரவியங்களைதோலில் பூசி மினுமினுப்பாக்கி
சில பானங்களைப் பருகி, பழங்களை உண்டு
அவ்வளவுதான் முடிந்துவிட்டது
புறத்தில் அழகுபடுத்த வேண்டியவை

தேவையற்ற பேச்சுகளைக் குறைத்து
நேரத்தை ஒழுங்காக நெறிப்படுத்தி
சில புத்தகங்கள்
இயற்கையோடு இயைந்த வாழ்வு
அகத்தில் அழகைக் கூட்ட
இவற்றுடன் நீக்கமற நீயும்

புதன், 10 பிப்ரவரி, 2010

ஒற்றை விதை


காலத்தோடு
பயிர் செய்ய சொன்னாய்..
தயங்கி நின்றேன்...

தயாராகிறேன்..
நீ அறுவடை முடித்து
செல்கிறாய்..
இந்த ஒற்றை விதையை
என்ன செய்ய?

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வலி


உன் ஆறுதலான வார்த்தைக்கும்
அக்கறைக்கும் முன்னால்
என் வலிகள்
பலமிழந்து திரும்பும்..

வரம்


எப்போதும்
உன் அசைவுகளையும்
ஆசைகளையும்
அறிந்து பயணிக்கும்
வரம் போதும்
என் ஆயுளுக்கும்..

என் நேசம்


பரிசோதனை முயற்சிகளில்
தோல்வியுறும்
என் நேசம்
இறுதியில் வென்றே தீரும்
தோல்விகளின் தொடர்தலையும்
வெற்றியின் தொடுதலையும்

தவணைமுறை












சுழற்சிமுறையில்
இயங்குகிறதென் உடல்
தவணைமுறையில்
இயங்குகிறதென் மனம்
சுவாசம் உணரவும் முடியாத
ஒடுதலில்
உனக்கான
நேசத்தை மட்டும்
தவறாமல் தந்து விடுகிறேன்
என் சுயமிழந்த நேரங்களிலும்..

சிவப்பு நிற குருதி










சொட்டுச் சொட்டாய்
வடியும் கருஞ்சிவப்பு நிற குருதியில்
எஞ்சியிருக்கிறது
உன்னுடன் இணைய முடியாத
இரவின் தவிப்புகளும்
தாமதமாய்
வீடு திரும்புமென்
பணியின் சுமைகளும்..

வியாழன், 4 பிப்ரவரி, 2010

காற்றும் காதலும்












தனியே சுற்றியலையும் காதல்
பேசியபடியிருக்கிறது
காற்றோடு..

காற்றை
தானறியாமல்
சுவாசிப்பது போல காதலையும்
சுவாசித்து செல்கின்றோம்
எல்லா கணங்களிலும்

காற்றும்
காதலும் கண்ணில் தெரிவதில்லை
உயிரில் உணரப்படுகிறது..

காற்று பெயரும் தோறும்
காதலும் பெயரும்
காற்று நுரையீரலுக்கும்
காதல் இதயத்திற்கும்..

நள்ளிரவில்










இரவுகளைத் தின்று
செரித்தவன்
இன்று
இதயத்தைக் கொத்தி உண்கிறான்..
பலமையில்களுக்கு
அப்பாலிருக்கையில்
பொழியப்பட்ட காதலும்
தூவப்பட்ட வார்த்தைகளும்
மூச்சுக்காற்று
உரசிக் கொள்ளும் தூரத்தில்
கனத்த மௌனங்களை
நிரப்பியபடி ..

விதைத்த காதலின்
மொத்தமும்
இவ்வளவு விரைவாக
அறுவடையை
நோக்குமென
எதிர்பார்த்திருக்க
வாய்ப்பில்லை
அவனும் காதலும்

நள்ளிரவில்
அலைபேசியிலிருந்து
கசியும் ஒளியில்
கசிந்து கரைகிறது
நேசமும் நெருக்கமும்..

மூன்றாம் நாள்













பேசுகிற வார்த்தைகளுக்கும்
நடைமுறை வாழ்க்கைக்கும்
இருதுருவங்களுக்கிடையேயான
வேறுபாடு..

நேசத்தில் கொடுக்கப்படும்
வாக்குறுதிகள்
கோபத்தில் மறுதலிக்கப்படும்

மூன்றாம் முறையான
மறுதலித்தலில்
காட்டிக் கொடுக்கப்படும்
காதலின் இன்னொரு முகம்..

அது குற்றங்களைப்
பட்டியலிட்டு
பிரிவுச் சிலுவையில்
அறைந்த பிறகே வெளியேறும்..

மூன்றாம் நாள்
உயிர்த்தெழ
சாம்பலிருக்கும்..
அதற்குள்ளே
ஃபீனிக்சின் சிறு இறக்கைகளும்..

நட்புகளின் யாசிப்பின்றி










ஒருபோதும்
மதுவை சுவைப்பதில்லை
நட்புகளின் யாசிப்பின்றி..

உனது யாசிப்பினை ஏற்றத்தில்
மிஞ்சியிருக்கிறது..
கசப்பும் புளிப்பும்..

நேற்றிரவு மயக்கத்திலுன்
கை நழுவிய
கண்ணாடிக் கோப்பையின்
சில்லுகளைப்
பொறுக்கி எடுத்தென்
என் கை கிழித்துவிடாமல்..

இன்று உச்சிப் போதில்
வெளியேறிய
உன் வார்த்தை சில்லுகள்
பொறுக்கப்படாமலே
கிழித்து எறிந்திருக்கிறது
காதலின் சில பக்கங்களை

கண்ணாடிக் கோப்பை










உனக்கு மகிழ்ச்சியளிக்கும்
மது ஊற்றப்பட்டிருக்கும்
கண்ணாடிக் கோப்பை
நிறமேறுகிறது..

இரைப்பைக்குள்
இறங்குகையில்
நிறமாற்றுகிறது..

நிறங்களற்ற
இரவில்
மதுவின் வாசமே நிறமாகிறது.
தனிமையினை
உரித்து உடுத்துகிறது
மதுவின் வாசம்..

பிரிவு













சிறிய பிரிவுகள்
சுவரின் விரிசல்கள்
அவ்வப்போது பூசப்பட்டுவிடும்..

பெரிய பிரிவுகள்
சுவரின் பிளவுகள்
அவை அப்புறப்படுத்தப்பட்டு
புதிதாக எழுப்பப்பட
வேண்டியவை..

சிறியதோ பெரியதோ
பிரிவுகள்
வலியாகவும்
வழியாகவும்
இருக்கக் கூடியவை..

ஊற்றுக் கண்













மலைமுகடுகளின்
அடியில் கசியும்
அல்லது ஊறும்
நீர் சலசலப்பற்றவை

பெருமலையின் மேலிருந்து
கொட்டும் நீருற்றின் கண்
எங்கோ ஒரு சுனைநீரிலிருந்து
பிறக்கிறது..

ஊற்றுக் கண் தேடியலைந்து
மானின் கண்கள் சோர்வுற்று
நிழலில் ஒதுங்குகிறது..

நிழலோரத்தில்
இலைகள்
மேவிக்கிடந்த நீருற்று
காற்றின் விலக்குதலில்
கண்ணிற்பட்டது..

தாகம் தீர மான் நீரை
உறிஞ்சுகிறது..
ஊற்றிலிருந்து
நீர் புதிய புதிய
இசையோடு வெளிப்படுகிறது..

பொய்யும் காதலும்













யாரிடமும்
யாசித்ததில்லை
எதையும்
பிறர் யாசித்து மறுத்ததுமில்லை..

காதலை யாசித்தாய்
யோசிக்காமலும்
பின்விளைவுகளறியாமலும்
ஒப்புக் கொடுத்தேன்..

உடலினைக் கரைத்து
ஒழுகிய நிணநீர் துளிகளில்
சுவடுகளாய்
படர்கிறதுன்
பொய்யும் காதலும்..

வாலறுந்தபல்லி













நசநசத்த பிற்பகலில்
மின்விசிறியிலிருந்து
வெளியேறும்
வெப்பக்காற்றில்
வெறுமனேயிருந்த
இடைவெளியை அழித்தேடுத்தாய்..

வழியும் வியர்வைத்துளிகளை
உறிஞ்சியபடி
உனது மூச்சுக்காற்று
பயணிக்கிறது
உடலெங்கும்..

முற்றிலும் ஒலிகுறைக்கப்பட்டு
மாறிக் கசிந்த ஒளியில்
தொலைகாட்சி மட்டுமே
பார்த்தபடி
உள் பதிவுகளை கக்கியபடி
அதன் மூலையில்
ஒரு வாலறுந்தபல்லியும்..

நிழல்













எல்லா நடுநிசிகளையும்
போலில்லையது
அங்கொன்றும்
இங்கொன்றும்
தென்படும்
நட்சத்திரங்களும்
தொலைந்து போன நடுநிசியது..

தொலைதூரத்தில்
பெருமலைக்குப்பின்
காட்சி தர இருக்கும்
சூரியனை
நோக்கிய பயணத்தில்
எதிர்ப்படும் யாவும்
வெளிச்சப்புள்ளிகளின்
நிழல்களே..

நிழலில் ஒதுங்குகிறேன் என
மனம் பதறும்
பிரியமானவர்களே
இது வெளிச்சத்தை
நோக்கிய புறப்பாடு..
இருள்வது போல ஒளிரும்..
ஒளிர்வது போல இருளும்..
இருளும் ஒளியுமாய்
இயங்குதென் இலக்கு..

கடைசிச் சொட்டு


இது கடைசி முத்தமாகவும்
இருக்கக் கூடும்
மழை நின்றபின்
வடியும் இலையின்
கடைசிச் சொட்டு நீராய்..

வேர்

வேர்கள் பிடுங்கப்பட்டு
விசிறியடிக்கப்பட்ட போதெல்லாம்
விழுமிடத்தில்
வேர்விடத் தெரிந்திருக்கிறது..
இருக்குமிடத்தை பொறுத்து
சல்லி வேராகவோ
ஆணி வேராகவோ
உருமாறிக் கொள்ளும்
என் வேர்..

தீர்மானி

எண்கள் மட்டுமே
விடைகளைத்
தீர்மானிப்பதில்லை
அதற்கிடையேயான
குறிகளும்தான்

எண்ணங்கள் மட்டுமே
வாழ்க்கையைத்
தீர்மானிப்பதில்லை
அதற்கொத்த சூழலும்தான்..

விட்டுக் கொடு

எனக்காக ஏதும் செய்பவன்
இல்லையென்று இயம்பாத
இதயமுள்ளவன்
எனக்காக எல்லாமும்
விட்டுக் கொடுத்தான்
இறுதியில்
இரக்கமுள்ளவனாய்
என்னையும்..

வார்த்தை


வார்த்தைகளில் இல்லை
வாழ்க்கை என்றாலும்
வாழ்க்கையை நிறைத்திருப்பது
வார்த்தைகளே..

அத்தியாயம்













முடிந்தது ஒரு அத்தியாயம்
அழுகை, அரவணைப்பு
மிரட்டல், தியாகம்,
சீண்டல் , தீண்டல்
இன்பம், இயக்கம்,
அனைத்தையும் உள்ளடக்கி
முடிந்தது ஒரு அத்தியாயம்

அத்தியாயத்தின்
கடைசிப் பக்கம்
வெற்றாயிருக்கிறது
கையெழுத்திட்டு
மூடி வைக்கிறேன்
கைநழுவிப் போகிறது
கண்முன்னே
முடிந்தது
ஒரு துவக்கத்தின்
அத்தியாயம்..

இந்த நிலம்













யாருக்கும் சொந்தமில்லை
இந்த நிலம்
யாருக்கும் பாரமில்லை
இந்த நிலம்

களைகள், பயிர்கள்
பூச்சிகள், பறவைகள்
யாவையும் தாங்கிய நிலம்
அறுவடை முடிந்து
அமைதியாய்

மழை எப்போதும் வரலாம்
இந்த நிலத்திற்கென
பொழியக் காத்திருக்கும்
மேகத்தின் வரவிற்காக
காத்திருக்குமிந்த நிலம்

விற்றவர்கள் எப்போதும்
பெற்றுக் கொள்ள முடியாது..
பெற்றவர்கள் ஒருபோதும்
விற்க முடியாது..

யாருக்கும் சொந்தமில்லை
இந்த நிலம்
யாருக்கும் பாரமில்லை
இந்த நிலம்

முடிச்சு













அடிக்கடி
முடிச்சிடுவதற்கு
உறவின் முனைகளை
தயார்படுத்துவது சிரமமானது

முடிச்சுகள் வலுவிழக்கும்
முனைகளின் தொய்வால்..

இரண்டு பக்க முனைகளும்
முடிச்சுகளுடனே இருக்கட்டும்
மற்றொரு முனையின்
முடிச்சுக்கு வழிகொடுக்காமல்..

நீளுமிந்த கணங்கள்


உனது
சுவாசத்தின் வாசத்தோடு
வெளியேறும்
வார்த்தைகளை
எனதிதழ்களால் குறிப்பெடுக்கிறேன்..
எனது வார்த்தைகளை
மரணிக்க செய்து

நீளுமிந்த கணங்கள்
முற்றுப்பெறும்
நீயென் பார்வைகளை
குறிப்பெடுக்கையில்..

உரிமை


உனது
பொருட்களின் மீதான
உரிமை
உன்னிடம்
எனக்கிருக்கும்
உரிமையை விட
குறைவானவை.

நேசம் பகிர்

விட்டுவிடு
கரைசேரா
காதலில்
மூழ்கி விடாமல்
எப்போதும் போல்
எல்லோரிடமும்
நேசம் பகிர்
நெருக்கம் கொள்..

மூடி மறை


இதயத்தினுள்
மூடி மறைக்கிறாய்..
சிலவற்றை

கண்கள் வழி
வெளிப்படுகின்றன..
அவை..

அமிழ்ந்த காதல்










நாம் மீண்டும் சந்திப்போம்
காதலை
புதைத்த இடத்தில்..

முன்னர் கொட்டிய
வீண் சொற்களின் எஞ்சிய எலும்புகளும்..
மென் சொற்களின் மிஞ்சிய களிம்புகளும்
தென்படும் தடயங்களாய் ..

நீயும் நானும் பார்த்திருக்க
நமக்குள் அமிழ்ந்த காதல்
வெடித்துச் சிதறியழும்..

ஆற்றுபடுத்த தயங்குகையில்
தானே தேற்றிக் கொண்டு
தொடர்ந்து வரும்
நமது சுவடுகளின்
அடியொற்றி..

அப்போது
நாம் மீண்டும் சந்திப்போம்
காதலை விதைத்த இடத்தில் ...

சனி, 5 டிசம்பர், 2009

அப்பா


அதட்டி அடக்கும்
அப்பா பேச்சை
மீற
சொல்லித் தரவே இல்லை
அம்மா..
அவள் செயலின் மூலம்..

எப்போது


உயிரெழுத்துக்களையும்
மெய்யெழுத்துக்களையும்
பிரித்துப் போடுகிறேன்..
சேர்க்கச் சொல்லி
பாடம் நடத்துகிறாய்..
நீயும்
அப்பாவும்
எப்போது சேருவதாய்
நினைத்து இருக்கிறீர்கள்?

உன் முகம்









பூப்பறிக்க
என்னையும்
அழைத்துப்போகிறாய்..
ஒருகணம்
பூவையும் என்னையும்
மாறி மாறி பார்க்கிறாய்..
மறுகணம்
ஏதும் சொல்லாமல்
தோட்டத்திலிருந்து
வெளியேறுகிறாய்..
பூக்களில்
இப்போது உன் முகம்..

விளையாடு


என்னோடு
சேர்ந்து நீயும்
விளையாடுகிறாய்..
உன்
குழந்தை பருவத்தை
மீட்டெடுத்து..

வறுமை


பிறந்து
சில தினங்களே ஆன
நானும்
அம்மாவுடன்
வேலை செய்ய
பயிற்சி எடுக்கிறேன்..
வறுமையைப் போக்க..

இமை


இமை முடிகளை
இழுத்துப் பார்க்கிறேன்
அசைவற்று
உறங்குகிறாய்
வலி பொறுத்து...

வெப்பம்..



உன் அணைப்பின்
வெப்பத்திலிருந்து
என்னைப்
பிரித்து விடாதே..
உலர்ந்து போவேன்.....

திங்கள், 29 ஜூன், 2009

கவிதை

எந்த திசையிலிருந்தும்
உதிப்பதுமில்லை
மறைவதுமில்லை
சூரியன்...

எந்த நாளிலும்
தேய்வதுமில்லை
வளர்வதுமில்லை
நிலவு..

எந்த சூழலிலும்
பிறப்பதுமில்லை
இறப்பதுமில்லை
கவிதை...

எங்கும் எதிலும்
எப்போதுமிருக்கிற கவிதை
தன்னை வெளிப்படுத்துகிறது
யாரேனும் அனுமதிக்கையில்..