சனி, 5 டிசம்பர், 2009

அப்பா


அதட்டி அடக்கும்
அப்பா பேச்சை
மீற
சொல்லித் தரவே இல்லை
அம்மா..
அவள் செயலின் மூலம்..

எப்போது


உயிரெழுத்துக்களையும்
மெய்யெழுத்துக்களையும்
பிரித்துப் போடுகிறேன்..
சேர்க்கச் சொல்லி
பாடம் நடத்துகிறாய்..
நீயும்
அப்பாவும்
எப்போது சேருவதாய்
நினைத்து இருக்கிறீர்கள்?

உன் முகம்









பூப்பறிக்க
என்னையும்
அழைத்துப்போகிறாய்..
ஒருகணம்
பூவையும் என்னையும்
மாறி மாறி பார்க்கிறாய்..
மறுகணம்
ஏதும் சொல்லாமல்
தோட்டத்திலிருந்து
வெளியேறுகிறாய்..
பூக்களில்
இப்போது உன் முகம்..

விளையாடு


என்னோடு
சேர்ந்து நீயும்
விளையாடுகிறாய்..
உன்
குழந்தை பருவத்தை
மீட்டெடுத்து..

வறுமை


பிறந்து
சில தினங்களே ஆன
நானும்
அம்மாவுடன்
வேலை செய்ய
பயிற்சி எடுக்கிறேன்..
வறுமையைப் போக்க..

இமை


இமை முடிகளை
இழுத்துப் பார்க்கிறேன்
அசைவற்று
உறங்குகிறாய்
வலி பொறுத்து...

வெப்பம்..



உன் அணைப்பின்
வெப்பத்திலிருந்து
என்னைப்
பிரித்து விடாதே..
உலர்ந்து போவேன்.....

திங்கள், 29 ஜூன், 2009

கவிதை

எந்த திசையிலிருந்தும்
உதிப்பதுமில்லை
மறைவதுமில்லை
சூரியன்...

எந்த நாளிலும்
தேய்வதுமில்லை
வளர்வதுமில்லை
நிலவு..

எந்த சூழலிலும்
பிறப்பதுமில்லை
இறப்பதுமில்லை
கவிதை...

எங்கும் எதிலும்
எப்போதுமிருக்கிற கவிதை
தன்னை வெளிப்படுத்துகிறது
யாரேனும் அனுமதிக்கையில்..