திங்கள், 15 மார்ச், 2010

புன்னகையின் குப்பி

ஒருமுறை
கடற்கரைக்குச் சென்றபோது
கண்ணீரைச் சேமித்து
வைத்திருந்த குப்பி
தவறி விழுந்துவிட்டது
கடலில்..

அதற்கு பிறகான நாட்களில்
கடல்நீர் இன்னும் கரிப்பதாய்
கடலோர மக்கள்
பேசிக் கொண்டிருப்பதாக
யாரோ சொல்ல..

மீதமிருந்த
கொஞ்சம் புன்னகையை
குப்பியில் நிரப்பிக் கொண்டு
கடலை நோக்கி விரைந்தேன்..

எனக்கு முன்னதாக
ஒருவன் தன் புன்னகையின்
குப்பியை கடலில்
மிதக்க விட்டிருந்தான்..
என்னிடமிருந்த புன்னகையை
அவனிடம் சேர்ப்பித்துவிட்டு
திரும்பினேன்..

ஒரு மாலையில்
மக்கள் பேசிக் கொண்டனராம்
வலையில் விழும் மீன்களுக்கு
பற்களின் எண்ணிக்கைக்
கூடியிருப்பதாக..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக