வெள்ளி, 11 ஜூன், 2010

அக்கறை

நீ
மறந்துவிட்டுச் சென்ற
மதிய உணவை
காற்றிடம் கொடுத்தனுப்ப முனைந்தேன்
நகரக் காற்றுக்கு மாசுகளால்
தன்னடை தளர்ந்திருப்பதால்
உன்னைச் சேர தாமதமாகும்..

மேகத்திடம் கொடுத்தனுப்பலாமெனில்
வெயிலுக்கு பயந்து
மலைப்பிரதேசங்களை விட்டு
வெளியே வருவதில்லை மேகம்..

வேறெதுவும் யோசிக்காமல்
சட்டென்று நானே புறப்பட்டு வருகிறேன்
உன்னை உடனே சேர
என்னையின்றி
யாருக்கு அக்கறையிருக்கப் போகிறது?

சலவை

ஒவ்வொரு நேற்றையும்
சலவைக்கிட்டுத்தான்
இன்றாக உடுத்த வேண்டியிருக்கிறது..

ஒவ்வொரு நாளையும்
சலவை செய்ய
அதிக நேரம் பிடிப்பதில்லை..

சில நாட்களை சலவை
செய்யவே முடிவதில்லை..
அவ்வளவு கறைகள்
அப்பிக் கொண்டிருக்கிறது..
அதனை தூக்கிப்போடவோ
பழையனவற்றோடு ஒதுக்கவோ
கூடுவதில்லை..

சில நாட்களை சலவை
செய்ய மனம் வருவதில்லை
அவ்வளவு தூய்மையாக
மணத்துடன் இருக்கிறது..
ஆன போதும்
சலவைக்கு வந்து விடுகிறது..

முந்தைய நேற்றுகளிலுள்ள
பெருங்கோபமும்
சிறுசஞ்சலமுமான
அழுக்குகள் நீக்கப்பட்டு
மகிழ்வும், தெளிவுமான
புதிய வாசனை வீசுகிறது
இன்றைய நாளாடைகளில்..

எல்லா நாட்களும்
ஒன்று போல்
சலவை செய்யப்படுவதில்லை..

பரபரப்பும்
பதற்றமுமான
வாழ்க்கைச் சூழலில்
வாரத்தில் உடுத்திய
ஆறு நாட்களையும்
ஞாயிற்றில்தான்
சலவை செய்ய முடிகிறது....

ஞாயிற்றை எப்போது
சலவைக்கிடுவது?

ஒரு பறவை

ஒரு குழந்தையைப் போல
விளையாட விடு..
அல்லது
ஒரு பறவையைப் போல
பறக்க விடு..
அல்லது
ஒரு கவிதையைப் போல
வாழவிடு..
அல்லது
உன் நேசத்தையாவது
சொல்லிவிடு..

வீரத்திற்கான வெளிப்பாடு..

மிச்சமிருந்த
மரணம் பற்றிய பயத்தை
விட்டொழித்தேன்..
அறிமுகமற்ற
வாழ்வு பற்றிய
ரகசியத்தை
அறிந்து கொண்டேன்..
இரண்டும்
உன் மனதிலிருந்து
துண்டித்து வீசப்பட்ட
வார்த்தைகளின்
ஒப்பிடமுடியாத
வீரத்திற்கான வெளிப்பாடு..

நமக்கான இடைவெளி

நமக்கிடையே
ஒன்றுமில்லை..
அதீத நேசம்
அளவிலா அன்பு
அடங்காத மகிழ்ச்சி
அடம்பிடிக்கும் இதயம்
ஈர்ப்பான பார்வை
இப்படி
நமக்கிடையே ஒன்றும் இல்லை..
நமக்கான இடைவெளிகளில்
நம்மைத் தவிரவும் யாருமில்லை..

பின்வாங்க மறுக்கும் நேசம்..

வயல்வெளியினூடே
எதற்கும் அஞ்சாது நிற்கும்
வைக்கோல் பொம்மையினை
கண்டு பயந்து போகும்
பறவைகளைப் போலானதல்ல..
பின்வாங்க மறுக்கும் நேசம்..

வேறு வழி

எங்கு பார்த்தாலும் உன் பிம்பமே..
எதைக் கேட்டாலும் உன் குரலே..
எதைச் செய்தாலும் உன் நினைவே..
எது பேசினாலும் உனைப் பற்றியே..
எந்த நுகர்விலும் உன் வாசமே..
ஐம்புலன்களும் அடங்காமல்
உன்னைச் சுற்றி..
அடக்கும் வழி தெரியாமல்
அல்லாடுகிறேன்..
அத்தனையையும்
நிறுத்திக் கொள்ள
நீ நேசிப்பதைத் தவிர
வேறு வழியேயில்லை..

வகுப்புத் தோழி

அறிந்தோ அறியாமலோ
விரும்பியோ விரும்பாமலோ
எனக்கு மரணத்தை சந்திக்க வாய்த்திருந்தது..

எனக்கு மூத்தவன்
ஒரு வருடத்திற்குமுன்
இறந்தே பிறந்த
கருவறையில்தான்
நானும் கருவாயிருந்தேன்..

மூன்றாம் வகுப்பில்
வகுப்புத் தோழியுடன்
சண்டையிட்டுத் திரும்பிய மறுநாள்
அவள் நெஞ்சுவலியால்
இறந்த செய்தி
அஞ்சலி செலுத்துவதற்காக
சொல்லப்பட்டது..

ஆறாம் வகுப்பில்
பள்ளிக்குச் சென்ற
முதல் நாள்
உடன் நடந்து வந்த தம்பியின் மீது
வாகனம் மோதி அவன்
இரத்த வெள்ளமாய் கிடந்த போது..


பனிரெண்டாம் வகுப்பில்
பெரியப்பாவின் மகள்
கணவனின் சந்தேகத்திற்கு
கருவுற்ற நிலையில்
இரையாகினாள்..

முதுகலை இரண்டாமாண்டு
படிக்கையில்
வயதான காரணத்தால் மரணத்தை
தழுவிய தாத்தா
இறந்த செய்தியைக் கூட
உணரமுடியாமல்
அடுத்த 15 நாளில்
மூளைப்புற்றின் தாக்கத்தில்
உயிர்விட்ட அம்மாவின்
பேரிழப்பு..

எட்டுப்பக்க கடிதத்தைத்
துண்டறிக்கையாக்கிக் கொடுத்து
அதிர்ச்சி அலை ஏற்படுத்திய
முத்துக் குமாரின் உயிர்த்தியாகம்..

பெருநம்பிக்கையின்
அடையாளச் சின்னமான
தமிழ் உணர்வாளர்களின் தம்பி
பெரியாரின் வித்து
சிதைக்கப்பட்டதாக
ஊடக செய்திகள்..

இப்படி மரணத்துடன்
அறிமுக சந்திப்புகள்
பல வடிவங்களில்
வாய்த்திருக்கிறது..

இந்த முறை உடன்படிக்கை
ஒன்றில் கையெழுத்திட
சொல்லிக் காத்திருக்கும்
மரணத்தின் கையிலிருக்கும்
தாளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது
என அறிய ஆவலுடன்
தயாராகும் எனக்கு
சற்றும் விருப்பமில்லை
மரணித்து வாழ்வதில்..

விழியீர்ப்புவிசை

நான் உளறினேன்
நீ உதறினாய்
நானும் நீயும்
அறிந்திருக்கவில்லை..
அது என் இறுதி சொற்களென..

நான் நெருங்கினேன்..
நீ விலகினாய்..
நானும் நீயும்
அறிந்திருக்கவில்லை..
அது என் இறுதி விருப்பமென..

நான் அழுதேன்..
நீ சிரித்தாய்..
நானும் நீயும்
அறிந்திருக்கவில்லை..
அது என் கடைசிக்
கண்ணீர் துளியென..

நான் ஏதேதோ சொன்னேன்..
நீ எதுவுமே சொல்லவில்லை..
நாம் அறிந்திருக்கவில்லை..
அது நமக்கு கடைசி சந்திப்பென..

நான் நீயாயிருந்தேன்..
நீ நானாகவில்லை..
நாம் அறிந்திருந்தோம்..
நமக்குள்
விழியீர்ப்புவிசை இருப்பதை..

ஏதும் திட்டமிடப்படாத
நம் பயணத்தில்
எல்லாவற்றையும்
திட்டமிட்டிருந்தது
இயற்கை..

சராசரி கனவு

வாழ்ந்து கொண்டு மரணிப்பதும்
மரணித்துக் கொண்டு வாழ்வதுமான
போக்கில்
இன்னும் உடன்படிக்கை
ஏற்படவில்லை..
சராசரி கனவுகளுடன்
பயணிக்குமெனக்கு..

நகருமென் பொழுதுகள்

சில கனவுகளைச் சொல்லியும், சொல்லாமலும்
சில கவிதைகளை எழுதியும், எழுதாமலும்
சில வார்த்தைகளைப் பகர்ந்தும், பகராமலும்
சில இரவுகளைக் கொடுத்தும், கொடுக்காமலும்
சில கோபங்களைக் காட்டியும், காட்டாமலும்
சில சோகங்களை வெளியிட்டும், வெளியிடாமலும்
சில ரகசியங்களை மறைத்தும், மறைக்காமலும்
சில ஏக்கங்களைக் கூறியும், கூறாமலும்
சில நேரங்களைச் செலவிட்டும், சேமித்தும்
சில வலிகளைத் தாங்கியும், தாங்காமலும்
சில விருப்பங்களை அறிந்தும், அறியாமலும்
நகருமென் பொழுதுகள்
சில சமயங்களில் பிறப்பதும், மரணிப்பதுமாய்..

யார் கண்ணும் பட்டுவிடாமல்

சிறு ஓவியத்தையொத்த
நமது பயணத்தில்
கண்ணில் தென்பட்ட
அத்தனை வண்ணங்களையும்
குழைத்துப் பூசியிருந்தோம்..

கடலும், வானும் தோற்றுப் போகும்
நீலத்தில் நெருக்கத்தையும்
தும்பையும், நிலவும் பின்வாங்கும்
வெள்ளையில் தூய்மையையும்
குருதியும், ரோஜாவும் வெட்கப்படும்
சிவப்பில் சிந்தனையையும்,
கருவிழியும், இருளும் கண்டறியாத
கருப்பில் இரகசியங்களையும்
கதிரவனும், சூரியகாந்தியும் பார்த்திராத
மஞ்சளில் தெளிவினையும்
புல்வெளியையும், அடர்காடுகளையும்
மிஞ்சும் பச்சையில் விருப்பங்களையும்
சேர்த்து வரைந்த
ஓவியத்தையொத்த காட்சியை
இதுவரை பாதுகாத்து வருகிறோம்..
யார் கண்ணும் பட்டுவிடாமல்..

நதியினடி

இருளுமென் பூமியைச் சுற்றி
வட்டமிடுகிறதுன் பார்வை..

காடடர்ந்த பகுதியில்
ஒளிந்திருக்குமென் நேசத்தை
தேடியலைகிறதுன்
காலம் தவறிய ஞானம்..

யாருடைய அச்சுறுத்தலுக்கும்
மித மிஞ்சிய அன்பிற்கும்
அடிபணியாத
என் ஆசைகளை
மரக்குகைகளுக்குள்ளும்
நதியினடிக்குள்ளும்
மறைத்திருக்கிறேன்..

நீயும் கூட அறிந்திராத
அப்பாதைப் பரப்புகளை
குறியீடுகளால் விளக்கவும்
செல்லும் வழிகளிலுன்
தாகம் தீர்க்கவும்
நிலப்பரப்பில் விட்டு வந்திருக்கிறேன்..
குருதி கொட்டும் காலடித் தடங்களையும்..
சுரந்தபடியிருக்கும் சில சொற்களையும்..

வேறொன்றும் அறியேன்

உனது காலம் முழுமைக்கும்
உடன் வர விருப்பப்பட்டனேயன்றி
வேறொன்றும் பெருங்குற்றம்
புரியவில்லை..

உனது தீரா அன்பின்
வெப்பத்தில் பயணிக்க துணிந்தனேயன்றி
வேறொன்றும் பாவச் செயல்
செய்யவில்லை..

உனது குறும்புன்னகையின்
சிதறல்களை ஆயுளுக்கும் சேர்க்க
முயன்றதேயல்லாமல்
வேறொன்றும் தீமையினை
நினைக்கவில்லை..

எனது செல்கள் அனைத்திலும்
ஊடுருவிய உன்னை
ஒளித்து வைக்க
உன்னையே நாடியதை தவிர
வேறொன்றும் அறியேன் பராபரமே..

பைரவி ராகம்

உன்னைச் சந்திக்க கிளம்புகையில்
வாழ்வதற்கான பெருவிருப்பத்தோடு
இறங்கி நடக்கிறேன் சாலையில்..

என் அறையில் அணைக்க மறந்த
பண்பலையில் பைரவி ராகம்
கசிந்து கொண்டிருந்தது..

எதிர்வீட்டுத் தொட்டிச்செடியில்
இரண்டு பூக்கள் மலர்ந்திருந்தன..

வலதுபக்கத்தின் ஐந்தாவது வீட்டில்
குழந்தைகளின் சிரிப்பு சத்தம் கேட்டது..

தெருமுனையில் பிச்சைக்காரன் ஒருவனுக்கு
உணவளித்தாள் மூதாட்டி ஒருத்தி..

மூன்றாம் தெருவைக் கடக்கையில்
தாய்நாய் தன் குட்டிகளுக்கு
பாலூட்டியபடியிருந்தது..

உன்னை சந்தித்த பின்
மரணத்திற்கான யோசனையோடு
வீடு திரும்புகிறேன்..

தன் குட்டிகளிலொன்றை
விழுங்க முயற்சித்தபடியிருந்தது
தாய்நாய் மூன்றாவது தெருவில்..

அந்த மூதாட்டி பிச்சைக்காரனை
விரட்டினாள் தெருமுனையில்..

குழந்தைகளின் அழுகுரல் காதைக் கிழித்தது
இடது பக்கத்தின் ஐந்தாவது வீட்டில்..

பூக்களின் இதழ்கள் உதிர்ந்து கிடந்தன
எதிர்வீட்டுத் தொட்டிச் செடியில்..

எனது அறையிலிருந்த பண்பலையில்
முகாரிராகம் பாடிக் கொண்டிருந்தது..

பொறுப்பாளி

விசாரணைக்குட்பட
விருப்பமில்லை
நிரூபிக்கவும்
சாட்சிகளில்லை
எனது நியாயங்களும்
எனது தவறுகளும்
அவரவர் பார்வைக்கு
மாறுதலுக்குட்பட்டவை
இருப்பினும்
எனது செயல்களுக்கு
நான் மட்டுமே பொறுப்பாளியல்ல..
எனது கவிதைகளுக்கும் கூட..