வியாழன், 28 அக்டோபர், 2010

நேசத்தில் பின்னப்பட்ட கேள்விகள்

இந்த கைகள் இன்னும்
என்னுடையதாய் இருக்கிறது
அது இப்போதும்
இயற்கையிடம்
வேண்டிக் கொண்டிருக்கிறது..

இந்த கால்கள் இன்னும்
என்னுடம்பில் இருக்கிறது
அது விடுதலையின்
பாதையை நோக்கி
ஓடிக் கொண்டிருக்கிறது..

என்து கண்களின் பார்வை
இன்னும் மங்கிப் போகவில்லை..
அது பேரொளியை
தேடிக் கொண்டிருக்கிறது..

எனது செவிகள் இன்னும்
கேட்கும் திறனை இழக்கவில்லை..
அது பூபாளத்தை
எதிர்பார்த்திருக்கிறது..

எனது மனம் இன்னும்
சோர்ந்து போக வில்லை..
அது நம்பிக்கையைப்
பற்றிக் கொண்டிருக்கிறது..

எது நடந்த போதும்
வாழ்க்கை ஒருமுறையே
வாழ்ந்திருப்பேன்..
சாவதற்குள்
என் மண்ணில்
சுதந்திரக் காற்றை சுவாசிக்க..

கைவசமிருக்கும்
அத்துணை காரணங்களையும்
சொல்லியாகிவிட்ட நிலையில்
காலாவதியான
அந்த காரணங்களையே
தின்னக் கொடுக்கிறாய் என்
நியாயமான கேள்விகளுக்கு ..
தின்று செரிக்க முடியாமல்
வெளித்தள்ளுகிறது..
நேசத்தில் பின்னப்பட்ட
கேள்விகளும்
எதிர்பார்ப்புகளும்
என் காத்திருப்பினூடே
.